Tuesday, January 22, 2013

அமெரிக்காவில் ஒரு பாரம்பரிய பொங்கல் விழா!

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின்(Bay Area Tamil Manram - BATM) சார்பாக கடந்த சனியன்று  (19/1/2012) பொங்கல் விழா பிரிமாண்ட் நகரில் மிக விமரிசையாக கொண்டாடபட்டது.இம்முறை பாரம்பரிய வாசனையுடன் தமிழர்களின் பண்பாட்டை பறை சாற்றும் விளையாட்டு, சம்பர்தாயங்கள் மற்றும் கலை நிகழ்ச்சியுடன் அனைவரும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

காலையில் விழா வளாகத்தில் பொங்கல் வைத்தலுடன் கோலாகலமாக தொடங்கியது பொங்கல் விழா. விழாவிற்கு சிறிது தாமதமாக சென்றதால் பொங்கல் வைப்பதை முழுமையாக காண முடியவில்லை. நான் முடியும் தருவாயில் தான் போய் சேர்ந்தேன்.

பிறகு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உறி அடித்தல் நடைபெற்றது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் கண்கள் கட்ட பட்டு உறி அடிக்க கட்டையுடன் கிளம்பினர். அனுபவமின்மையால் பெரும்பாலோரானால் சரியாக அடிக்க முடியவில்லை. அடுத்த வருடம் நிறைய உரியடிகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

அடுத்து சிறுவர்களின் சிலம்பாட்டம் செய்முறை விளக்கம் நடைபெற்றது. சிறுவர்கள் அழகாக சிலம்பு சுழற்றி காட்டினர். அமெரிக்காவில் இருந்து கொண்டு சிலம்பம் கற்று கொண்டு இவ்வளவு சிறப்பாக சுழற்றுவது அதிசயமே!


பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.முன்னாள் தமிழ்மன்ற தலைவர்களை மேடைக்கு அழைத்து நன்றி தெரிவித்து  நினைவு பரிசை கொடுத்தார்கள். முன்னாள் தமிழ்மன்ற தலைவர் திரு பிரபு வெங்கடேஷ் தமிழ் மன்றத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பாடு பட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.



பிறகு பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து நடனங்களும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன. முக்கியமாக கும்கி பாடலின் கையளவு படலுக்கான நடனமும் மார்கழி தான் ஓடி போச்சு பாடலுக்கான நடனமும் மிக மிக அருமையாக இருந்தது. அனைத்து நடனங்களின் நேர்த்தியையும் பார்த்தால் அதற்கு பின் இருந்த அவர்களின் கடின உழப்பை உணர முடிந்தது.முக்கியமாக கர்னாடக சங்கீதம் அல்லது மேற்கத்திய இசைக்கு நடனமாடாமல் அழகிய தமிழ் பாடல்களுக்கு, பாரம்பரிய நடனத்தை கண்ட போது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது.

வெறும் நடனம் என்று இல்லாமல் உறுமி மேளம், நையாண்டி நாயனம் போன்ற பழந்தமிழ் இசை கருவிகளை காட்டி, விளக்கி , வாசித்தி காட்டியது முத்தாய்ப்பாக இருந்தது.(நாயன கருவி மட்டும் கடைசி நேரத்தில் உடைந்து காலை வாரிவிட்டது!)

பிறகு கவியரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. கலந்து கொண்ட அனைவரும் அருமையாக உணர்வு பூர்வமான கவிதை வாசித்தனர்.மக்கள் கூட்டமும் மிக திரளாக வந்திருந்தது. இரு முறை மதிய உணவு தீர்ந்து மீண்டும் மீண்டும் வருவித்தனர் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். சாப்பாடு வருவதற்கு முன் பசியால் வாடிய குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு வடை, பிசா என்று இருந்ததை வழங்கி கொண்டே இருந்தார்கள்.
கவியரங்கம்


சென்ற வருடம் ஒரு தமிழ் மன்ற விழாவிற்கு சென்ற போது தொடர்ச்சியாக வெறும் கர்னாடக இசை நிகழ்ச்சியே இருந்தது. ஆனால் இந்த முறை அனைத்து வித நிகழ்ச்சிகளும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இனி வரும் நிகழ்ச்சிகள் இது போல தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.



3 comments:

DiaryAtoZ.com said...

வித்தியாசமான பொங்கல் செய்தி. தொடர்ந்து கொண்டாடுங்கள்.

Avargal Unmaigal said...

தமிழ் கலாச்சராத்தை மறக்காமல் பொங்கல் விழா கொண்டாடியது ஆச்சியரியத்தை தந்தது. பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

சதுக்க பூதம் said...

நன்றி Avargal Unmaigal,DiaryAtoZ.com