Wednesday, December 05, 2012

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு

ஹவாய் என்றவுடன் அனைவரின் மனதிலும் முதலில் வருவது கடல் மற்றும் நீர் விளையாட்டுகள் தான்.ஆனால் ஹவாய் தீவின் பசுமை கொஞ்சும் இயற்கை அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.ஜுராசிக் பார்க் திரைபடத்தில் வரும் அடர்ந்த காடும் அருவிகளும் ஹவாய் தீவில் (கௌவா'யி kaua'i) தான் படமாக்க பட்டன.பெருந்தீவின் மேற்கு கடற்கரை பகுதியான கோனா கடற்கரை பகுதி வறண்ட வானிலையுடன் கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பெருந்தீவின் கிழக்கு பகுதி பெரு மழை பொழிவுடன் அடர்ந்த வெப்ப மண்டல மழை காடுகளை கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள 13 வகையான சீதோஷ்ண மண்டலங்களில் 11 வகையான சீதோஷ்ண மண்டலங்கள் பெருந்தீவில் உள்ளன. அதன் விளைவாக பாலைவன செடிகளையும் காணலாம். அழகிய புல்வெளிகளையும் காணலாம். தோட்ட பயிர்களையும் காணலாம். அடர்ந்த காடுகளையும் காணலாம். இவை அனைத்தையும் 4000 சதுர மைல்களுக்குள்ளே கண்டு களிக்க முடியும். பெருந்தீவு முழுவதையும் சுற்றி காண்பிக்க ஒரு நாள் பேருந்து மூலம் செல்லகூடிய டூர் வசதி உள்ளது. அந்த சுற்றுல்லாவில் சென்றால் சுமார் 30 நிமிடத்துக்கு ஒன்றாக புது புது சீதோஷ்ண நிலையை காணமுடியும். அவ்வாறு செல்லும் போது வெயில்/குளிர்/மழை அனைத்தையும் தாங்க கூடிய வெவ்வேறு வகை உடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து செல்வது நலம்!

 

பெருந்தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் காரில் சென்றாலே கண்ணுக்கினிய வெப்பமண்டல காடுகளை ரசித்து கொண்டே செல்லலாம். ஹெலிகாப்டர் சுற்றுல்லா மூலம் வானிலிருந்து இயற்கை அழகை கண்டு மகிழலாம்.பெருந்தீவின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான அகாஅகா நீர்வீழ்ச்சியை காரில் சென்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் கடினமான டிரக்கிங் செய்து மலை/காடுகளின் வழியே நடந்து தான் பார்க்க வேண்டும். கம்பி சருக்களில் சறுக்கிய படியே zipline மூலம் அகாஅகா நீர்வீழ்ச்சியின் அழகை மற்றுமொரு கோணத்தில் காண்பது மறக்க முடியாமல் இருக்கும்.பெருந்தீவில் நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கைக்கும் அழகுக்கும் குறைச்சல் இல்லை. கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் கணக்கிலடங்கா நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில் பலவற்றை மலையேற்றம் மூலம் தான் அடைய முடியும்
 
 
அகாஅகா நீர்வீழ்ச்சி
 
வானவில் நீர்வீழ்ச்சி
 பெருந்தீவின் பசுமை அழகை முழுமையாக கண்டுகளிக்க செல்ல வேண்டிய இடம் வைப்பியோ பள்ளதாக்கு(Waipio Valley).ஹவாய் பூர்வ குடியினரின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்தது இந்த பள்ளதாக்கு.தாஜ்மகாலை பார்த்தவுடன் எப்படி மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுமோ அது போல் வைப்பியோ பள்ளதாக்கை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.நீல நிற கடற்கரை ஓரத்தில் பசுமையான புல்வெளிகளும், அதனருகில் பசுமையான மலையும் அதிலிருந்து கடல் நோக்கி வீழும் மிக பெரிய நீர் வீழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டும்.இந்த பள்ளதாக்கை முழுமையாக கண்டுகளிக்க வைப்பியோ பள்ளதாக்கு பார்வையாளர் பகுதிக்கு (Waipio valley lookout) காரில் பயணித்து சென்று பார்க்களாம்.இந்த பள்ளதாக்கினுள் செல்ல சாதாரண கார்களால் முடியாது. கனரக மோட்டார் வாகனங்களை கொண்டு ATV (All-terrain vehicle) சுற்றுல்லா அழைத்து செல்ல குழுக்குள் உள்ளன.இதன் மூலம் நீங்களே இந்த வாகனங்களை புல்வெளிகள், அடர்ந்த காடுகள் வழியே ஓட்டி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த சுற்றுல்லாவிற்கு பொருள் செலவு அதிகமானாலும் இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக தவறவிட கூடாத ஒன்று.(2 வயதிற்கும் குறைவான குழந்தைகளை அழைத்து செல்ல முடியாததால் என்னால் இந்த சுற்றுல்லாவில் செல்ல இயலவில்லை).





சோக சரித்திரம்

ஹவாய் தீவின் பசுமை அழகை என்ன தான் ரசித்தாலும் அதன் பின்னனியில் உள்ள சரித்திரத்தை பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஹவாய் தீவு பசுபிக் பெருங்கடலின் நடுவே பிற நிலபரப்புகளால் எளிதில் நெருங்க முடியாத அளவு தனித்து அமைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து பெர்ன் செடியின் ஸ்போர் பல்லாயிரம் மைல்கள் காற்றில் பயணித்து எரிமலை லாவா படிமத்தில் விழுந்து உயிரின தோற்றத்தை ஏற்படுத்தியது. பூச்சிகளும்,விதைகளும் சிலந்திகளும் காற்றின் மூலம் ஹவாயை அடைந்தது.இடம்பெயர் பறவைகள் விதைகளையும், கடல் மூலம் உப்பு எதிர்ப்பு தன்மை கொண்ட விதை, செடி, பூச்சிகளும் இத்தீவை வந்தடைந்தன. சுமார் 32 மில்லியன் ஆண்டுகளாக பரிணாம முறைபடி புது புது வகையான உயிர்கள் தோன்றின. அதாவது சுமார் 30 வகை வெளியூர் பறவையிலிருந்து 110 வகை பறவைகள் பரிணமித்தன.280 பூக்கும் செடியிலிருந்து1100 வகை செடிகள் தோன்றின.

உலகின் பிற பகுதியிலிருந்து வந்த உயிரிணங்கள் இங்கு தனக்கு மிக சில எதிரிகளே(Predator and parasite) இருக்கும் சூழ்நிலையில் வளர்ந்தன்.அதன் விளைவாக எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பரிணாம தகவமைப்புகள் அவைகளுக்கு தேவையில்லாமல் இருந்தது. அதன் விளைவாக புதிதாக தோன்றிய உயிரிணங்கள் அந்த தகவமைப்புகளை இழக்க தொடங்கின. உதாரணமாக பறக்கவே முடியாத பறவைகளும், வாசனையையே வெளிபடுத்தாத stink bug போன்றவைகளும் தோன்றின,


காட்டு இஞ்சி
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலினேசியன் மக்கள் இந்த தீவிற்கு வர ஆரம்பித்த பின் நிலமை மாற ஆரம்பித்தது. காடுகள் அழிக்க பட தொடங்கின. அவர்கள் கொண்டு வந்த மிருகங்களும், செடிகளும் பல்கி பெருகின. அதன் சூழியல் விளைவு மோசமாக இருந்தது. உதாரணமாக பாலினேசியன் மக்களின் பன்னிகள் பெர்ன்(fern) செடிகளையும், ஒகியா காடுகளையும் அழித்தன. பன்னிகள் கூடாரத்திலிருந்து பல்கி பெருகிய கொசுக்கள் பறவை மலேரியா மற்றும் பிற நோய்களை பறவைகளுக்கு பரப்பின. பூனை, எலி போன்றவை பறவைகள் மற்றும் முட்டையை தின்று தீர்த்தன. காட்டு இஞ்சி போன்ற செடிகள் விரைவாக பெருகி உள்ளூர் செடிகளை அழித்தன.அதன் பிறகு ஐரோப்பிய மகக்ளின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட இயற்கை அழிவு பற்றி எழுத தேவை இல்லை.கடந்த சில நூற்றாண்டுகளில் கரும்பு தோட்டத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்த காடுகள் அழிக்க பட்டது. ஜப்பான், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரபட்டனர். இந்த பேரழிவுகளையும் மீறி மிஞ்சிய உயிரினங்களும், அறிமுக படுத்த பட்ட செடி கொடிகளின் அழகுமே மறக்க முடியாததாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஹவாய் தாவரவியல் பூங்கா

உலகில் பல்வேறு வெப்ப மண்டல காடுகளில் வளரும் அழகிய ஆர்கிட்கள் மற்றும் மலர் செடிகளை ஹவாய் தாவரவியல் பூங்காவில் வைத்துள்ளனர். வித விதமான, பல்வேறு  வண்ண மய மலர்கள் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. இந்த பூங்கா கடற்கரை ஓரம் மலையை ஒட்டி ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்து உள்ளது.சுமார் 125 தாவர குடும்பத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செடிவகைகள் இங்கு உள்ளன.








மொத்தத்தில் ஹவாய் பெருந்தீவு இயற்கை ஆர்வலர்களின் ஆசையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவில் உள்ள மனுதர்மத்தை ஒத்த  வர்ணாசிரம முறை ஹவாய் பழங்குடியினரிடமும் இருந்தது. ஹவாய் பழங்குடியினரின் மத நம்பிக்கையை பற்றி பிரிதொரு பதிவில் காண்போம்

முந்தய பதிவு

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

No comments: